மக்களவை 74 மணிநேரம் 46 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 தொடங்கி நடைபெற்று வந்தன. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவிருந்த கூட்டம் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட்டன.
இதையும் படிக்க | முன்கூட்டியே முடிக்கப்பட்ட மக்களவை: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
இந்நிலையில் கூட்டத்தொடருக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓம் பிர்லா கூறியது:
“நான் எதிர்பார்த்த அளவு மக்களவை கூட்டத்தொடர் நடைபெறாதது வருத்தமளிக்கிறது. எப்போதும், அதிக அளவிலான மக்கள் பிரச்னைகளை அவையில் விவாதிக்க முயற்சி செய்வேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காலத்திலும் நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட்டன. இரவு நீண்ட நேரம்கூட எம்.பி.க்களின் விவாதங்கள் தொடர்ந்தன. ஆனால் இந்த முறை தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதை தீர்க்க முடியவில்லை.
74 மணிநேரம் 46 நிமிடங்கள் மட்டுமே மக்களவை செயல்பட்டன. 22 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றன. அனைத்துக் கட்சி ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதா உள்பட 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அவையின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதமருக்கு நன்றி.
அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் கண்ணியத்தை பேணவேண்டும். கோஷமிடுவதும் பதாகைகளை ஏந்துவதும் நமது நாடாளுமன்ற பாரம்பரியத்தில் இல்லை. அவையில் விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் கண்ணியம் குறைந்ததில்லை.”