'ஜெய் ஸ்ரீ ராம்' என முழங்கச் சொல்லி இஸ்லாமியர் மீது தாக்குதல்: மூவர் கைது
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர் ஒருவரை 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழங்கச் சொல்லி, அவரது மகளின் கண் முன்னே தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உள்பட மூவர் கைது செய்ய
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர் ஒருவரை 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழங்கச் சொல்லி, அவரது மகளின் கண் முன்னே தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
புதன்கிழமை பஜ்ரங் தளம் கூட்டம் நடத்தி வந்த இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பேசுபொருளானதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
தாக்குதலில் காயமடைந்த அஃப்சர் அகமது காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தன்னைத் தாக்கியவர்களின் பெயரில் அஜய் என்கிற ராஜேஷ் பந்த்வாலாவின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், அஜய் மற்றும் அமன் குப்தா, ராகுல் குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரும், விடியோவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அமன் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. 'ஜெய் ஸ்ரீ ராம்' என முழங்கச் சொல்லி மகள் கண் முன்னே இஸ்லாமியர் மீது தாக்குதல்: உ.பி.யில் கொடூரம்
பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்ட விவரம் அறிந்ததும், வியாழக்கிழமை இரவு பஜ்ரங் தள தொண்டர்கள் ஏராளமானோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முறையான விசாரணை நடத்தப்படும் என்று காவலர்கள் உறுதிமொழி அளித்தப் பிறகே அவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக, தாக்குதலில் பாதிப்புக்குள்ளானவர் அளித்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் நபர் ஒருவர், அவரது மகன் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து காவல்துறை உதவி ஆணையர் விகாஸ் பாண்டே கூறுகையில், இந்த சம்பவம், இரு வேறு மதத்தைச் சேர்ந்த அக்கம் - பக்கம் வாழும் இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பிரச்னையில் ஏற்பட்ட தாக்குதல் இது என்று தெரிவித்துள்ளார்.
காவல் துறையிடம் அளித்த புகாரில் பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டிருந்ததாவது, "புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இ-ரிக்ஷா ஓட்டிக்கொண்டிருந்தபோது சிலர் என்னை இழிவாகப் பேசி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். காவல் துறையினரால் நான் காப்பாற்றப்பட்டேன்."
இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு அங்கு நடைபெற்ற பஜ்ரங் தளக் கூட்டத்தில், ஹிந்துப் பெண்களை மதம் மாற்ற இஸ்லாமியர்கள் முயற்சிப்பதாகக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.