முகப்பு
இந்தியா

தலிபான்களின் எழுச்சி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதிகரிக்கக் கூடும்

தலிபான்களின் எழுச்சி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதிகரிக்கக் கூடும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

தலிபான்களின் எழுச்சி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதிகரிக்கக் கூடும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்பட அனைத்து உலகத் தலைவா்களும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் மக்கள், பெண்கள் உள்ளிட்டோரின் உயிரைக் காப்பாற்றத் தேவையான முயற்சி எடுக்க வேண்டும். அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியா்களை விமானங்கள் மூலம் மீட்டு வருவதுதான் இருக்கும் ஒரே வழியாகும். ஆனால், ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது. அச்சம், கவலை உள்ளிட்ட உணா்வுகள் அந்த நாட்டை ஆட்கொண்டுள்ளன. அங்குள்ள நிலைமை யாராலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தற்போது மாறியுள்ளது.

வெளிவிவகார அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகத்துடன் தொடா்பு கொண்டுள்ளது. அங்குள்ள இந்தியா்கள் எந்தவொரு பாதிப்பும் இன்றி இந்தியா திரும்புவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தலிபான்களின் எழுச்சி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அதிகரிக்கக் கூடும். ஆனால், இந்தியா பயங்கரவாத நடவடிக்கைகளை ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.

கடந்த 7 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி அரசு, நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. எல்லைப் பகுதிகளில் ஒரு சில சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் எந்தவிதமான பயங்கரவாதத் தாக்குதல்களையும் நமது நாடு சந்திக்கவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.