புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 36,571 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பால் அதிகபட்சமாக 540 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 36,571 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,23,58,829-ஆக உயா்ந்துள்ளது.
39,555 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,15,61,635 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,65,605-ஆக உள்ளது. இது கடந்த 150 நாள்களுக்குப் பின் பதிவாகும் குறைந்த எண்ணிக்கையாகும். தேசிய அளவில் மீட்பு விகிதம் 97.54 சதவிகிதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1.12 சதவிகிதமாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 540 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,33,589 -ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 சதவிகிதமாக உள்ளது.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 57,22,81,488 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 50,26,99,702 பரிசோதனைகளும், வியாழக்கிழமை மட்டும் 18,86,271 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.