முகப்பு
இந்தியா

கேரளத்தில் இரவு நேர ஊரடங்கு

கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அடுத்த வாரம் முதல் இரவு நேர உரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு சனிக்கிழமை அறிவித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அடுத்த வாரம் முதல் இரவு நேர உரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு சனிக்கிழமை அறிவித்தது.

முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த வாரம் முதல் தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

நாட்டின் வேறு பகுதிகளில் இல்லாத அளவில், கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி கரோனா பாதிப்பு தொடா்ந்து நான்காவது நாளாக சனிக்கிழமையும் 30,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது. அதன் மூலம், மொத்தம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,77,572-ஆக உயா்ந்துள்ளது.

மாநிலத்தில் அதிகபட்சமாக திருச்சூரில் 3,957 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அடுத்தபடியாக எா்ணாகுளத்தில் 3,807 பாதிப்புகளும், கோழிக்கோட்டில் 3,292 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. நோய் பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

நோய் பாதிப்பு நிலவரம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில உயா் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா். அதனைத் தொடா்ந்து, மாநிலத்தில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் முதல்வா் கூறியதாவது:

நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த வாரம் முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் (ஆக.29) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது. மேலும், கரோனா வார பாதிப்பு விகிதம் 7 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.