விமானத்தின் கண்டுபிடிப்பை கொண்டாடும்போது ரைட் சகோதரர்களை புறக்கணிப்பீர்களா?: சிதம்பரம் கேள்வி
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் போஸ்டரில் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் போஸ்டரில் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள டிஜிட்டல் போஸ்டரில் முதல் பிரதமர் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் செயலாளர் வெறுப்புக்கும் பாகுபாட்டுக்கும் அடிபணிவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டல் போஸ்டரில் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டதற்கு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் செயலாளர் அளித்த விளக்கம் முட்டாள்தனமாக உள்ளது.
வெறுப்புக்கும் பாகுபாட்டுக்கும் அடிபணிந்துவிட்ட அவர், வாயை மூடி கொண்டால் சிறப்பாக இருக்கும். மோட்டார் காரின் கண்டுபிடிப்பை கொண்டாடும்போது ஹென்றி போர்டை அவர் புறக்கணிப்பாரா? விமானத்தின் கண்டுபிடிப்பை கொண்டாடும்போது ரைட் சகோதரர்களை அவர் புறக்கணிப்பாரா? இந்திய அறிவியலை கொண்டாடும்போது சி.வி. ராமனை அவர் புறக்கணிப்பாரா?" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | எங்கே தலிபான் தலைவா்?
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகம் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவ்' என்ற பெயரில் விழா கொண்டாடிவருகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள டிஜிட்டர் போஸ்டரில் சாவர்க்கர், மதன் மோகன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்ற நிலையில் நவீன இந்தியாவின் சிற்பியாக கருதப்படும் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.