'பஞ்சாப் மக்களுக்கு இரு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்' - கேஜரிவால்
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் உயர்தரத்துடன் ஏராளமான அரசுப் பள்ளிகள் கட்டப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் உயர்தரத்துடன் ஏராளமான அரசுப் பள்ளிகள் கட்டப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இன்று பஞ்சாபின் பதன்கோட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், 'பஞ்சாப் மக்களுக்காக 2 வாக்குறுதிகளை அளிக்கிறேன். தில்லியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் எல்லையில் வீரமரணம் அடைந்தால் அந்த குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படுகிறது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் ராணுவ வீரர்களுக்கும் இது கொண்டு வரப்படும்.
குர்தாஸ்பூர் மற்றும் பதான்கோட் ஆகிய இடங்களில் இருந்து அதிகம் பேர் ராணுவத்திற்குச் செல்கின்றனர். உண்மையில் ராணுவ வீரர்களின் தேசத்தில் இருப்பதை பாக்கியமாக உணர்கிறேன். போருக்கு செல்லும் வீரர்களின் எண்ணிக்கையைப் போல போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கையும் இந்த 2 இடங்களில்தான் இருக்கிறது.
இரண்டாவதாக, தில்லியைப் போன்று பஞ்சாபிலும் அரசுப்பள்ளிகள் அதிகம் கட்டப்படும். கடந்த ஆண்டு மெலானியா டிரம்ப் தில்லி வந்தபோது, தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளைப் பார்க்க விரும்பினார். தில்லி அரசுப் பள்ளிகள் அமெரிக்காவிலும் பிரபலமாக உள்ளன.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கா, கனடா, லண்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பஞ்சாபில் உள்ள அரசுப் பள்ளிகளைப் பார்க்க வருவார்கள். அந்த அளவுக்கு அரசுப்பள்ளிகள் உயர்தரத்துடன் கொண்டு வரப்படும் என்றார்.