ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு ஒமைக்ரான்
ராஜஸ்தானில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட 9 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட 9 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 9 பேரில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என்பதும் மீதமுள்ள 5 பேர் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
சுகாதாரத் துறைச் செயலர் வைபவ் கல்ரியா இதுபற்றி கூறியது:
"மரபணு பரிசோதனையில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 34 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் 9 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய இந்த குடும்பத்துடன் மற்றொரு குடும்பமும் தொடர்பிலிருந்துள்ளனர். சுகாதாரத் துறை அந்தக் குடும்பத்தில் 8 பேரைக் கண்டறிந்து கரோனா பரிசோதனை மேற்கொண்டது. அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி விரிவாக நடைபெற்று வருகிறது" என்றார்.