டெல்டா அளவுக்கு ஒமைக்ரான் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது: உலக சுகாதார அமைப்பு
டெல்டா வகை கரோனா அளவுக்கு ஒமைக்ரான் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்டா வகை கரோனா அளவுக்கு ஒமைக்ரான் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிகாவில் கண்டறிப்பட்ட புதிய ஒமைக்ரான் வகை கரோனா தற்போது 38 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் 23 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வகை பாதிப்பு தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்றும் தீவிரமாக பரவக்கூடியது என்றும் பல்வேறு விதமாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், டெல்டா அளவுக்கு ஒமைக்ரான் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
முந்தைய கரோனா வகைகளைவிட ஒமைக்ரான் கடுமையானது அல்ல. தற்போதுள்ள தடுப்பூசிகள் பயன்படாது என்பதும் தவறு என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
டெல்டா போன்ற முந்தைய கரோனா வகைகளைவிட மிகவும் கடுமையான நோயை ஒமைக்ரான் ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் ஆதாரமும் இல்லை.
ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளில் இருந்து தற்போதுள்ள தடுப்பூசிகள் காப்பாற்றும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசிகளுமே கரோனா வகை வைரஸ்களுக்கு எதிரான திறனை கொண்டிருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படாது என்று கூறுவதற்கு எந்த காரணமும் இல்லை. எனினும், இதுகுறித்த கூடுதல் ஆராய்ச்சி தேவை என்பது உண்மைதான் என்றார்.
முன்னதாக, அமெரிக்க தொற்று நோய் நிபுணர் அந்தோணி ஃபாசியும், டெல்டா உள்பட முந்தைய கரோனா வகைகளைவிட ஒமைக்ரான் கரோனா நிச்சயம் மோசமானது இல்லை என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.