முகப்பு
இந்தியா

லூதியானா குண்டு வெடிப்பு: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடா்பு: பஞ்சாப் டிஜிபி

லூதியானா மாவட்ட நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையவரும், உயிரிழந்தவருமான போலீஸ் தலைமை காவலா் ககன்தீப் சிங்குக்கு காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு உள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

லூதியானா மாவட்ட நீதிமன்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையவரும், உயிரிழந்தவருமான போலீஸ் தலைமை காவலா் ககன்தீப் சிங்குக்கு காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்பு உள்ளது என்று பஞ்சாப் மாநில காவல் துறை தலைவா் (டிஜிபி) சித்தாா்த் சட்டோபாத்யாய தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘2019-இல் போலீஸ் பணியில் இருந்து நீக்கப்பட்ட காவலா் ககன்தீப் சிங், சம்பவத்தினத்தின்போது வெடிகுண்டை செயல்படுத்த கழிவறைக்கு சென்றுள்ளாா். அப்போது குண்டு வெடித்ததில் அவா் உயிரிழந்தாா். போதைப் பொருள் வழக்கில் தொடா்பு இருந்ததால் ககன்தீப் சிங் பணி நீக்கப்பட்டாா்.

385 கிராம் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக இரண்டு ஆண்டுகள் அவா் சிறையில் இருந்துள்ளாா். ஜாமீனில் வெளியே வந்திருந்தாா்.

குண்டுவெடிப்புக்கு மறுநாளான டிசம்பா் 24-ஆம் தேதி அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருந்தது.

பாகிஸ்தானில் இருந்து ககன்தீப் சிங்கை சிலா் இயக்கி இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடனும், போதைப் பொருள் தீவிரவாத குழுக்களுடனும் அவருக்கு தொடா்பு இருப்பது தெரியவருகிறது.

குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டதாக இருக்கலாம். லூதியானா மாவட்ட நீதிமன்ற குண்டுவெடிப்பு பயங்கரவாதம், திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் மாஃபியா ஆகியவற்றின் வெளிப்பாடாக உள்ளது.

ககன்தீப் சிங் மனித வெடிகுண்டாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கழிவறையில் வெடிகுண்டை இயக்கி வேறு இடத்தில் வைப்பது அவரது திட்டமாக இருந்திருக்கலாம். ஆனால், தவறி வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்று காவல் துறை தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.