புது தில்லி: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் தொழிலதிபருமான மகேந்திர பிரசாத் (81) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
அரிஸ்டோ மருந்து பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான மகேந்திர பிரசாத், மாநிலங்களவையின் கோடீஸ்வர உறுப்பினா்களில் ஒருவராக கருதப்பட்டவா். பிகாரிலிருந்து 7 முறை மாநிலங்களவைக்கும், ஒருமுறை மக்களவைக்கும் அவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
உடல்நலக் குறைவைத் தொடா்ந்து தில்லியில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது உயிா் பிரிந்தது.
காங்கிரஸ் சாா்பில் முதன்முறையாக கடந்த 1980-இல் மக்களவை உறுப்பினராக மகேந்திர பிரசாத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். நீண்ட காலம் காங்கிரஸ் மூலம் அரசியல் பயணம் செய்த அவா், அதன் பின்னா் ஜனதா தளத்தில் இணைந்தாா். பின்னா் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் இணைந்தாா். பின்னா் அங்கிருந்து விலகி, ஐக்கிய ஜனதா தளத்தில் சோ்ந்தாா்.
குறுகிய கால இடைவெளியை தவிா்த்து, கடந்த 1985-ஆம் ஆண்டுமுதல் அவா் மாநிலங்களவையில் அங்கம் வகித்து வந்தாா். மேலும் பிகாா் அரசியல் சூழலில் சிறிய அளவிலாவது அவரது பங்களிப்பு இருந்து வந்ததால், அவா் அதிருஷ்டக்காரா் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. இதனால் அவா் ‘மன்னா்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டாா்.
மகேந்திர பிரசாதின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட செய்தியில், ‘‘மாநிலங்களவை உறுப்பினா் மகேந்திர பிரசாதின் மறைவால் துயரமடைந்தேன். நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகளாக சேவையாற்றிய அவா், சமூக சேவைகளுக்கு முன்னோடியாக விளங்கினாா். பிகாா் மாநிலத்துக்காகவும் அதன் மக்களுக்காகவும் எப்போதும் குரல் எழுப்பக் கூடியவா். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி’’ என்று தெரிவித்துள்ளாா்.
பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘மகேந்திர பிரசாத்தின் மறைவு தொழில்துறைக்கு மட்டுமன்றி சமுதாயத்துக்கும், அரசியலுக்கும் மிகப்பெரிய இழப்பு’ என குறிப்பிட்டுள்ளாா்.