ஒமைக்ரான் பரவலையடுத்து கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பா் 24-ஆம் தேதி கண்டறியப்பட்ட கரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தீநுண்மி, தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அளவில் கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.
புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் வருவதால் ஒமைக்ரான் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தீவிரமாக கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்,
இரவு நேர ஊரடங்கு அல்லது மக்கள் கூடுவதைத் தவிர்க்க 144 தடை உத்தரவு உள்ளிட்டவற்றைப் பிறப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.