குடியரசு தின வன்முறைச் சம்பவம்: நடிகர் தீப் சித்து கைது
குடியரசு தினத்தன்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்தனர்.
குடியரசு தினத்தன்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறைக்குக் காரணமானவர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்துவை செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்தனர்.
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடி அளிக்கும் வகையில், நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26-ஆம் தேதி, தில்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்தனர். இந்தப் பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில், நூற்றுக்கணக்கான போலீஸார் காயமடைந்தனர். பேரணியின்போது தில்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகளும், நிஹங் என்ற சீக்கியப் பிரிவைச் சேர்ந்தவர்களும், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினர்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கும் தில்லி போலீஸாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால், செங்கோட்டை பகுதி போர்க்களமாக மாறியது. செங்கோட்டையில் நடந்த இந்த வன்முறை தொடர்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்தில் முக்கிய எதிரியாக பஞ்சாபி நடிகர் தீப் சித்து அடையாளம் காணப்பட்டார். செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை ஏற்றுமாறு இளைஞர்களை அவர் தூண்டிவிட்ட விடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இதையடுத்து, குடியரசு தினத்தில் செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டதாக தீப் சித்துவுடன் சேர்த்து, ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், மற்றும் இக்பால் சிங் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். தீப் சித்து குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 1 லட்சம், மற்ற 4 பேர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. 50 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என தில்லி காவல் துறை அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, சுக்தேவ் சிங்கை தில்லி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை சண்டீகரில் கைது செய்தனர்.
7 நாள் போலீஸ் காவல்: தீப் சித்துவை தில்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இது தொடர்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "செங்கோட்டை வன்முறைக்குக் காரணமான தீப் சித்துவை, சண்டீகர் - அம்பாலா இடையில் உள்ள ஷிராக்பூர் பகுதியில் தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அமெரிக்காவில் உள்ள நடிகையுடன் தீப் சித்து நட்பில் இருந்து வருகிறார். மேலும், அவரது உதவியுடன் சமூக வலைதளங்களில் தீப் சித்து விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி பிரக்யா குப்தா உத்தரவிட்டார்.