குலாம் நபி ஆசாத்தின் சேவையை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்த பிரதமர்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று அவை உறுப்பினர்களின் உணர்ச்சிப் பெருக்கால் திக்குமுக்காடிப் போனது.
புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று அவை உறுப்பினர்களின் உணர்ச்சிப் பெருக்கால் திக்குமுக்காடிப் போனது.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் குலாம் நபி ஆசாத் ஓய்வு பெறவிருப்பதை முன்னிட்டு அவையில் இன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.
அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் ஆற்றிய பணிகளை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார்.
மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி வரும் குலாம் நபி ஆசாத் ஓய்வு பெற்ற பிறகு, அவருக்குப் பதிலாக நியமிக்கப்படும் நபர், அவரது பணியை ஈடு செய்ய மிகவும் சிரமப்பட நேரிடும். ஏனென்றால், குலாம் நபி ஆசாத், தனது கட்சிக்காக மட்டுமல்லாமல், இந்த நாட்டுக்காகவும், மாநிலங்களவைக்காகவும் பணியாற்றியவர், எனவே அவரது இடத்தை நிரப்புவது கடினம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலின்போது குஜராத்தைச் சேர்ந்த பக்தர்கள் அங்கு சிக்கிக் கொண்டனர். அந்த நேரத்தில், குலாம் நபி ஆஸாத் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். தனது குடும்ப உறுப்பினர்கள் அங்கு சிக்கித் தவித்தால் எந்த அளவுக்கு வருத்தப்படுவார்களோ அந்த அளவுக்கு வருந்தினர், அவர்களது நலனை விரும்பினார் என்று கண் கலங்கப் பேசினார் மோடி.