உ.பி.யில் கொடூரம்: குடும்பத்தினரால் இளம்பெண் உயிருடன் எரித்துக் கொலை
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தன் குடும்பத்தினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தன் குடும்பத்தினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி தங்காட்டா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜிகினா கிராமத்தில் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளூர் காவல்துறையினர் கண்காணிப்பு கேமிரா மற்றும் மோப்ப நாய் உதவியுடன், சடலம் கோரக்பூரில் உள்ள பெல்காட் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா யாதவ் என்ற இளம்பெண் என்று அடையாளம் காணப்பட்டது.
இதையடுதது, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில்,
Advertisement
கோரக்பூரில் இளம்பெண் ஒருவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துள்ளார். குடும்பத்தினர் அவனை விட்டு விலகும்படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அதை அப்பெண் மறுத்த காரணத்தால், குடும்பத்தினருடன் சேர்ந்து பெண்ணை கொல்ல முயன்றுள்ளனர். இதற்காகக் கூலிப் படையையும் நியமித்துள்ளனர்.
பிப்.3-ம் தேதி அப்பெண்ணை ஜிகினா கிராமத்தில் உள்ள வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று, வாய் மற்றும் கைகளைக் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளுக்கு ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆணுடன் தொடர்பு ஏற்பட்டு, அவனை விட்டுவிலக மறுத்ததால், அவளைக் கொல்ல குடும்பத்தோடு முடிவு செய்ததாகப் பெண்ணின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, பெண்ணின் தந்தை, சகோதரர், மைத்துனர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கபிர் நகர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.