முகப்பு
இந்தியா

தேசத் துரோக வழக்கு: கன்னையா குமார் உள்பட 10 பேருக்கு சம்மன்

தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் உள்பட 9 பேர் மார்ச் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

தேசத் துரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் உள்பட 9 பேர் மார்ச் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தத் தேவைப்படும் அனுமதி தில்லி போலீஸாருக்கு ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு கிடைத்தது. போலீஸாரின் இறுதி அறிக்கையை தில்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பங்கஜ் சர்மா திங்கள்கிழமை கவனத்தில் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து நீதிபதி கூறுகையில், "ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு, இதுதொடர்பான வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
 குற்றம்சாட்டப்பட்டோர் மீது விசாரணையைத் தொடர்வதற்கான அனுமதி உத்தரவை தில்லி அரசின் உள்துறை ஏற்கெனவே அளித்துள்ளது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ள குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அளிக்கப்படுகிறது. அவர்கள் மார்ச் 15-ஆம் தேதி விசாரணை அதிகாரி மூலம் வரவழைக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு தூக்கில் போடப்பட்ட நிகழ்வை நினைவுப்படுத்தும் வகையில் 2016, பிப்ரவரி 9-இல் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 அப்போது, இவரும், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் தேசத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக தில்லி வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் தேசத் துரோகம் மற்றும் சதித் திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், காஷ்மீரி மாணவர்கள் அகிப் ஹுசேன், முஜீப் ஹுசேன், முனீப் ஹுசேன், உமர் குல், ராயீபா ரஸ்úஸால், பாஸிர் பட், பஸரத் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
 முன்னதாக, தேசத் துரோக வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மேல் நடவடிக்கை எடுக்க தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவுக்கு தில்லி மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கில் 2019-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments