ஆப்கானிஸ்தானின் நான்கு மாகாணங்களில் சனிக்கிழமை காலை நடத்தப்பட்ட வெடி விபத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
காபூலில் நடந்த வெடி விபத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும், பாக்லான் மாகாணத்தில் சாலையோர குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்தனர். காபூலில் பி.டி.3-இல் உள்ள காபூல் பல்கலைக்கழக சாலையில் பாதுகாப்பு படைவீரர்களின் வாகனத்தைக் குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த வாகனம் பாதுகாப்பு விவகாரங்களுக்கான காபூல் தலைமையகத்தின் துணைத் தலைவரான முகமது நபி பயானுக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்ததாக, பாக்லான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு புல்-இ-கும்ரி நகரில் காவல்துறையினரின் வாகனத்தைக் குறிவைத்துக் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார், மேலும் இருவர் காயமடைந்தனர்.
மூன்றாவதாக காந்தஹார் மாகாணத்தில் உள்ள தமன் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
நான்காவதாக ஹெல்மண்ட் மாகாணத்திலும் நஹ்ர்-இ-சிராஜ் மாவட்டத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மேலும், சனிக்கிழமை காலை ஹெல்மண்ட் மாகாணத்தின் லஷ்கர்கா நகரில் நிகழ்த்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் தேசியப் பாதுகாப்பு இயக்குநரக பணியாளர் ஜுமா குல் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாதக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.