உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவுடனான முதல் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 50 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் தலைநகர் தில்லியில் போராடி வருகின்றனர்.
தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடா்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து, விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 4 பேர் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற குழுவுடன் நடைபெற உள்ள முதல் கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கிட் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாரும் உச்சநீதிமன்றத்தை அணுகவில்லை என்றும் மத்திய அரசே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.