தில்லியில் பறவைக் காய்ச்சல் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மற்றும் விலங்குகள் நலத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய தில்லி விலங்குகள் நல வாரிய இயக்குநர் ராகேஷ் சிங், தில்லி நகரம் முழுதும் பறவைக் காய்ச்சல் தொடர்பாக எழும் புகார்கள் பாதியளவு குறைந்துள்ளது. எனினும் பறவைக் காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தில்லியில் 1,200 பறவைகள் இதுவரை இறந்துள்ளன. ஜனவரி 20-ஆம் தேதி வரை விலங்குகள் நலவாரியத்திற்கு 720 புகார்கள் வந்துள்ளன. புகார்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழு பறவைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் என்று கூறினார்.
பறவைகள் இறந்தால் அதனை வெறும் கைகளால் தொட வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 201 பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் 21 பறவைகளுக்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. 150 மாதிரிகளுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்றும் குறிப்பிட்டார்.