வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை மக்களவை செயல்படாது: காங்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கும் வரை மக்களவை செயல்படாது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கும் வரை மக்களவை செயல்படாது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில், 2020 21-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் மக்களவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங், மொத்த உறுப்பினர்களுள்ள 19 கட்சிகளில் 16 கட்சி உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணித்துள்ளனர். இது அவர்களுக்கு அவமானகரமானதாக இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறும் வரையிலும்,
விவசாயிகள் வெற்றி பெறும் வரையிலும் மக்களவை நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார்.