ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா சிறையிலிருந்து விடுதலை
ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா இன்று திகார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
புது தில்லி: ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா இன்று திகார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
86 வயதாகும் சௌதாலா, ஏற்கனவே பரோலில் இருக்கும் நிலையில் இன்று திகார் சிறைச்சாலைக்குச் சென்று, சிறையிலிருந்து விடுதலையாவதற்கான பணிகளை முடித்துக் கொண்டு முறைப்படி சிறையிலிருந்து விடுதலையானார்.
கரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு, கடந்த மாதம் தில்லி அரசு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 9 ஆண்டு, 6 மாதம் சிறையில் கழித்த சிறைக் கைதிகளுக்கு 6 மாத சிறைத் தண்டனையை குறைத்தது. இதையடுத்து, சௌதாலா ஏற்கனவே 9 ஆண்டுகள், 9 மாதங்கள் சிறைத் தண்டனையை கழித்துவிட்டதால், அவருக்கு இந்த விதி செல்லும் என்பதால், அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் நியமன மோசடி வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, கடந்த 2013-ஆம் ஆண்டு சௌதாலா சிறையில் அடைக்கப்பட்டார்.