காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு: நொய்டாவில் இருவர் கைது
காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வாகனத்தை நிறுத்த மறுத்தவர்கள் திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
நொய்டா : காவலர்கள் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது வாகனத்தை நிறுத்த மறுத்தவர்கள் திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவின் பிஸ்ரக் பகுதியில் காவலர்கள் நேற்று (திங்கள்கிழமை) இரவு வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட காரில் வந்தவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது வாகனம் நிற்காமல் சென்றது.
சந்தேகமடைந்த காவலர்கள் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். திடீரெனெ எதிர்பாராத விதமாக காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். பின், காவல்துறை தரப்பிலிருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காரில் இருந்தவர்களில் இருவருக்கு காலில் குண்டடிபட்டது . மடக்கி பிடித்த வண்டியின் உள்ளே இருந்தவர்கள் கைது செய்தப்பட்டனர்.
இதுபற்றி அம்மாவட்டத்தின் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ஆங்குர் அகர்வால், “துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட இருவரைப் கைது செய்துவிட்டோம் . மற்றொருவர் தாக்குதலின் போது தப்பித்திருக்கிறார். அவரைப் பிடிப்பதற்கு தேடலைத் தொடங்கி உள்ளதாகவும் பிடிபட்ட இருவரின் பெயர்கள் சிராஜ் மற்றும் ராமு எனவும் மேலும் அவர்களிடமிருந்து உரிமம் பெறாத 2 துப்பாக்கிகளும் சில தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.