மத்திய அரசு மீது டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு
"பெகாஸஸ் குறித்து மத்திய அரசு விவாதத்துக்குத் தயாராக இல்லை. மழைக்கால கூட்டத்தொடரை வீணடிப்பதே மத்திய அரசின் எண்ணமாக இருக்கிறது' என திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.
புது தில்லி: "பெகாஸஸ் குறித்து மத்திய அரசு விவாதத்துக்குத் தயாராக இல்லை. மழைக்கால கூட்டத்தொடரை வீணடிப்பதே மத்திய அரசின் எண்ணமாக இருக்கிறது' என திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக தொடர்ச்சியாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எதற்காக அவைகள் ஒத்திவைக்கப்படுகின்றன என்பது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் செய்தியாளர்களிடம் புதன்கிழமை விளக்கினர்.
இதில் தமிழகம் தொடர்புடைய கட்சிகளின் சார்பில் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலுவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் பேசினர். அவர்கள் கூறியதாவது:
டி.ஆர்.பாலு: பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பலமுறை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. நோட்டீûஸயே ஏற்காத அரசு, விவாதத்துக்கு தயார் என உதட்டளவில் வெளியே கூறிக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் எண்ணம் மழைக்கால கூட்டத்தொடரை இடையிலே முடித்து வீணடித்துவிடவேண்டும் என்கிற முயற்சியில் உள்ளது. அதனால்தான் அவையை ஒத்திவைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றார்.
தொல்.திருமாவளவன்: அவையை ஒத்திவைப்பதை மட்டுமே மத்திய அரசு குறிக்கோளாக வைத்துள்ளது. அவையில் பெகாஸஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், ஒட்டுமொத்த தகுதிகளையும் இழந்து நிற்கும் மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.