குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவின் தனிப்பட்ட சுட்டுரைக் கணக்கில் இருந்த நீல நிற டிக் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
வெங்கைய நாயுடுவின் தனிப்பட்ட சுட்டுரைக் கணக்கில் இருந்த நீல நிற டிக் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மீண்டும் அது வழங்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் முன்னிலையில் இருக்கும் சுட்டுரை வலைத்தளத்தில், முக்கிய நபர்களின் சுட்டுரைக் கணக்கை உறுதிசெய்யும் வகையில் நீல நிற டிக் வழங்கும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சில புகார்கள் காரணமாக, புதிதாக நீல நிற டிக் தரும் முறையை சுட்டுரை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட சுட்டுரைக் கணக்குக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நீல நிற டிக் வசதியை சுட்டுரை நிறுவனம் இன்று காலை நீக்கியது.
இந்தப் பக்கத்தை வெங்கைய நாயுடு, கடந்த ஆண்டு ஜூலை 23-ஆம் தேதிதான் கடைசியாகப் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் குடியரசுத் துணைத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தைப் பயன்படுத்தி வருகிறார்.
நீல நிற டிக் அகற்றப்பட்டது குறித்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கு சுட்டுரை நிறுவனத்தின் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கிடையே, வெங்கைய நாயுடுவின் சுட்டுரைப் பக்கத்தில் மீண்டும் நீல நிற டிக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்ச்சை முடிவுக்கு வந்தது.