புது தில்லியில் கரோனா பாதிப்பின் நான்காவது அலை கடுமையாக தாக்கிய நிலையில் சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இரண்டு நாள்களாக தகனக் கூடங்களுக்கு கரோனா நோயாளிகளின் உடல்கள் கொண்டுவரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நான்காவது கரோனா அலை மே மாதத்தில் கடும் தீவிரமடைந்தது. அப்போது இடுகாடுகளிலும், சுடுகாடுகளிலும் ஏராளமான உடல்கள் இறுதிச் சடங்குக்காகக் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
தற்போது கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கரோனாவுக்கு பலியானவர்களின் உடல்கள் எதுவும் தகனமேடைகளுக்கு வரவில்லை என்பதால், தகனமேடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சற்று நிம்மதி அமைந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒவ்வொரு நாளும் தகனமேடைகளுக்கு எத்தனை கரோனா நோயாளிகளின் உடல்கள் வந்தது என்பது குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படும். அந்த வகையில் கடந்த 2 அல்லது 3 நாள்களாக கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஒரு உடலும் தகனமேடைகளுக்குக் கொண்டு வரப்படவில்லை என்று தெரிய வந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.