செலவினத்தை 20% வரை குறைக்க அமைச்சகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் செலவினங்களை 20 சதவீதம் வரை குறைக்குமாறு துறைகள், அமைச்சகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் செலவினங்களை 20 சதவீதம் வரை குறைக்குமாறு துறைகள், அமைச்சகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் மத்திய அரசு இந்த வலியுறுத்தலை வழங்கியுள்ளது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத் துறை அனைத்து அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘திட்டங்கள் சாராத செலவினங்களை 20 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்கள், கூடுதல் நேர பணிக்கான ஊதியம், வாடகை உள்ளிட்ட செலவினங்களைக் குறைக்கலாம். அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அச்சிடுதல், பொருள்கள் விநியோகம், விளம்பரப்படுத்துதல், பராமரிப்பு உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்படும் செலவினங்களையும் குறைக்க வலியுறுத்தப்படுகிறது. அதே வேளையில், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செலவினங்களைக் குறைக்குமாறு துறைகளுக்கும் அமைச்சகங்களுக்கும் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் கரோனா தொற்று பரவியபோதும் இதேபோன்ற வலியுறுத்தலை மத்திய அரசு வழங்கியிருந்தது. நாட்டில் உள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்காகக் கூடுதலாக ரூ.1.45 லட்சம் கோடி வரை செலவிடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு செலவினங்களைக் குறைக்குமாறு அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.