புது தில்லி: நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த 3 நாள்களில் கூடுதலாக 96,490 கரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கவிருக்கிறது.
மத்திய அரசு இதுவரை, 26.68 கோடிக்கும் அதிகமான (26,68,36,620) கரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. திங்கள்கிழமை காலை வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 25,27,66,396 டோஸ் தடுப்பூசி (வீணானவை உள்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமாா் 1.40 கோடி (1,40,70,224) கரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன.
தாராளமயமாக்கப்பட்ட விலை நிா்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, மே 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய செய்தி தகவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.