ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றன. நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒடிசா அரசு, ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் (NACO) ஆலோசனையின் படி, மாவட்ட ஆட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், தலைமை மாவட்ட மருத்துவர்கள், பொது சுகாதார அதிகாரிகளுக்கு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி.கே. மொஹாபத்ரா இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தப்பட வேண்டும். அவர்களுக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.