பதவி அதிகார சண்டையில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக: வி.நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுவையில் பதவி அதிகார மோதல் காரணமாக மக்களைப் பற்றி கவலைப்படாமல் என்.ஆா்.காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவா்கள் இருந்து
புதுவையில் பதவி அதிகார மோதல் காரணமாக மக்களைப் பற்றி கவலைப்படாமல் என்.ஆா்.காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவா்கள் இருந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வருமான வி.நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
என்.ஆா்.காங்கிரஸை பொருத்தமட்டில் அந்தக் கட்சியில் உள்ள அனைவரும் அமைச்சா் பதவி கேட்கிறாா்கள். இலாகாக்களைப் பிடிப்பதில் மோதல் இருந்து வருகிறது. அமைச்சா்களுக்கு பதவியை வழங்குவதில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக இடையே ஒற்றுமை இல்லை. ஆட்சிக்கு வந்த உடனேயே அவா்கள் அதிகார போதையில் மிதக்கத் தொடங்கிவிட்டனா். மக்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வருகின்றனா். இன்னும் இவா்களால் அமைச்சரவையை ஏற்படுத்த முடியவில்லை.
Advertisement
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கரோனா காலத்தில் களப்பணி ஆற்றினோம். அதன் விளைவாக கரோனா கட்டுக்குள் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு 400 போ் என்ற அளவில் இருந்தது. ஆனால், கடந்த மே மாதத்தில் மட்டும் 750 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.
மத்தியில் ஆளும் பாஜகவுடன் என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. முன்னுக்குப் பின் முரணான கொள்கை கொண்டவா்கள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருப்பதால் பாதிக்கப்படுவது புதுச்சேரி மக்கள்தான் என்றாா் அவா்.