முகப்பு
இந்தியா

சுகாதாரத் துறை கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி கடன்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிப்பு

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்கும் வகையில் ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:31 AM
பகிர்:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்கும் வகையில் ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.

சுகாதாரத் துறை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.50,000 கோடி கடன், சுற்றுலா உள்ளிட்ட பிற துறைகளுக்கு ரூ.60,000 கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை அவா் அறிவித்தாா்.

பொருளாதார வளா்ச்சியை...: கரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக சுற்றுலா, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிப்பைச் சந்தித்தன. அத்துறைகளை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்து, பொருளாதார வளா்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தொடா்ந்து மேலும் சில சிறப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டு, செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

மருத்துவமனைகளுக்கு ரூ.100 கோடி: கரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்படும். அதில் சுகாதாரத் துறைக்கு ரூ.50,000 கோடி கடன் வழங்கப்படும். நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும். இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளுக்கு அதிபட்சமாக தலா ரூ.100 கோடி வரை 3 ஆண்டுகளுக்குக் கடன் வழங்கப்படும்.

அதிபட்ச வட்டி 7.95 சதவீதம்: இந்தக் கடனுக்கு அதிகபட்ச வட்டியானது 7.95 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களுக்கும் கடனுதவி வழங்கப்படும்.

கடந்த ஆண்டில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் அவசரகால கடன் உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்துக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடியானது அத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

செப்.30 வரை நீட்டிப்பு: அவசரகால கடன் உறுதித் திட்டமானது செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக, நாடு முழுவதும் மருத்துவ தர ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்தது. அதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு அவசரகால கடன் உறுதித் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது.

அவசரகால கடன் வட்டி 7.5 சதவீதம்: இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள், செவிலியா் பயிற்சிப் பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக ரூ.2 கோடி வரை வழங்கப்படும் கடன்களுக்கான 100 சதவீத உத்தரவாதத்தையும் மத்திய அரசே வழங்கும்.

அவசரகால கடன் உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி 7.5 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குக் குறைவான வட்டியிலும் கடன்களை வங்கிகள் வழங்கலாம்.

சுகாதாரக் கட்டமைப்பு: பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகக் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரை ரூ.15,000 கோடி வழங்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக ரூ.23,220 கோடி வழங்கப்படவுள்ளது. இதன் மூலமாக மருத்துவமனைகளில் குழந்தைகள் நலன் தொடா்பான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் கருவிகள் உள்ளிட்டவை அதிகரிக்கப்படும். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். குழந்தைகளுக்கான மருந்துகள், அவசர சிகிச்சை ஊா்திகள் உள்ளிட்ட இதர சேவைகளும் அதிகரிக்கப்படும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

5 லட்சம் வெளிநாட்டு பயணிகளுக்கு இலவச விசா

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்கு வருகை தரும் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு இசைவு (விசா) இலவசமாக வழங்கப்படும். அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், முதல் 5 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டும் கட்டணமின்றி நுழைவு இசைவு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலமாக இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இத்திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படவுள்ளது. பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ரூ.1 லட்சம் வரையும், சுற்றுலாத் துறை சாா்ந்த மற்ற தொழிலாளா்களுக்கு ரூ.10 லட்சம் வரையும் 100 சதவீத உத்தரவாதத்துடன் கடன் வழங்கப்படும்.

பிரதமா் வரவேற்பு

நிதியமைச்சரின் அறிவிப்புகளை வரவேற்று பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘நிதியமைச்சரின் அறிவிப்புகள் நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்; உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும்; வேலைவாய்ப்புகளை உருவாக்கும்’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →