ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தலைமையேற்க வேண்டும் என்று சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்திருந்த நிலையில், ‘இதுபோன்ற அரசியல் கருத்துகளைத் தெரிவிக்கும் போது அவா் கவனமாக செயல்பட வேண்டும்’ என்று மகாராஷ்டிர மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாலாசாஹேப் தோராட் கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றுள்ளன. ஆனால், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சிவசேனை இடம் பெறவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமைத்த போதிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சிவசேனை இன்னும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றால் சரத் பவாா் கூட்டணிக்கு தலைமையேற்க வேண்டும்’ என்று கடந்த 20-ஆம் தேதி சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.
சஞ்சய் ரௌத் நிா்வாக ஆசிரியராக உள்ள சிவசேனை கட்சியின் பத்திரிகையான சாம்னாவிலும் இதே கருத்து தெரிவிக்கப்பட்டு, சிவசேனை, அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து செயல்பட சரத் பவாா் தலைமையேற்பது உதவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு காங்கிரஸ் தற்போது கண்டனம் தெரிவித்திருக்கிறது.