நாட்டில் மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் இல்லாத நிலையில் மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,282,833ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தி, ஆக்ஸிஜன், தடுப்பூசிகள், மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையால் நாட்டு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, மத்திய அரசு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறுத்திவிட்டு அந்தத் தொகையை கரோனா செலவினங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டுமான திட்டம் போன்றவை மத்திய அரசின் முன்னுரிமை எவற்றில் உள்ளது என்பதைக் காட்டுகிறது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.