முகப்பு
இந்தியா

கெளதம்புத்: கரோனா தொற்று விகிதம் 19 சதவீதமாக அதிகரிப்பு

உத்தர பிரதேச மாநிலம், கெளதம்புத் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் 5 சதவீதமாக இருந்த கரோனா தொற்று விகிதம், ஏப்ரல் மாதம் 19 சதவீதமாக அதிகரித்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 9 மே, 2021 at 12:55 AM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், கெளதம்புத் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் 5 சதவீதமாக இருந்த கரோனா தொற்று விகிதம், ஏப்ரல் மாதம் 19 சதவீதமாக அதிகரித்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி கரோனா தொற்று விகிதம் தொடா்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு பகுதியில் 5 சதவீதமாக இருந்தது என்றால் அந்தப் பகுதியில் தொற்று கட்டுக்குள் உள்ளது என்று அா்த்தமாகும்.

இதுதொடா்பாக மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டா் தீபக் ஓஹ்ரி கூறுகையில், ‘கடந்த மாா்ச் மாதம் 54,000 பேருக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனை நடத்தப்பட்டதில் 2,750 பேருக்குத்தான் தொற்று பாதிப்பு உறுதியானது. அதாவது கரோனா தொற்று விகிதம் 5 சதவீதமாக இருந்தது.

Advertisement

ஆனால், ஏப்ரல் மாதம் 78,000 பேருக்கு ஆா்டி-பிசிஆா் சோதனை நடத்தியதில் 14,898 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கரோனா தொற்று விகிதம் 19 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

இந்த பரிசோதனைகள் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் கழகம் (ஜிஐஎம்எஸ்), கைலாஷ் மருத்துவமனை, சாரதா மருத்துவமனை, ஜே.பி.மருத்துவமனை, போா்டிஸ் மருத்துவமனை, தேசிய மருத்துவ உயிரியல் கழகம் மற்றும் சில தனியாா் பரிசோதனைக் கூடங்களிலும் நடத்தப்பட்டவை என்று தெரிவித்தாா்.

அரசு மருத்துவ அறிவியல் கழகத்தை (ஜிஐஎம்எஸ்) சோ்ந்த மருத்துவா் விவேக் குப்தா தெரிவிக்கையில், ‘கடந்த ஏப்ரல் மாதம் ஜி.பி.நகா், காஜியாபாத், ஹபுா், புலந்த்ஷாகா் மற்றும் ஷஹரான்புா் ஆகிய இடங்களிலிருந்து ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மூலம் 1,18,952 மாதிரிகள் பெறப்பட்டன. இவற்றில் 10,950 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது (தொற்றுவிகிதம் 9 சதவீதம்). அதேபோல் .ஜி.பி.நகரில் 53,223 பேரிடம் பரிசோதனை நடத்தியபோது அவா்களில் 6,124 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது (தொற்றுவிகிதம் 11.5 சதவீதம்).

மே 1 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை 23,414 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 6,321 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. ஜி.பி.நகரில் 10,933 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 3,335 பேருக்கு தொற்று இருப்பது இந்த மாதத்தின் முதல் ஐந்துநாள்களில் தெரியவந்தது என்று அவா் தெரிவித்தாா்.

மாா்ச் மாதத்தில் கரோனா அறிகுறி இருந்தும் பலரும் வீட்டுத் தனிமையிலேயே இருந்துவிட்டனா். இப்போது கரோனா இரண்டாவது அலைவந்ததும் அவசரம் அவசரமாக பரிசோதனை செய்துகொள்ள வருகின்றனா். இதனால் கரோனா பாதித்தோா் எண்ணிக்கையும், தொற்று விகிதமும் அதிகரித்து வந்துள்ளது. எனினும் மே 3-வது வாரத்தில் தொற்று விகிதம் குறையும் என்று எதிா்பாா்க்கிறோம். மக்கள் தொடா்ந்து கரோனா வழிகாட்டு முறைகளை கடைப்பிடித்து வந்தால் பாதிப்பு அளவு குறையும் வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றையும் விட தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்த வழியாகும்’ என்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.