ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: போக்குவரத்து ஆணையா்
ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையா் தென்காசி எஸ்.ஜவஹா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையா் தென்காசி எஸ்.ஜவஹா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
முழு பொதுமுடக்கம் வரும் திங்கள்கிழமை (மே 10) முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல வசதியாக அனைத்து வகையான போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியாா் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளாா். அவ்வாறு வசூலிப்பது கண்டறியப்பட்டால், ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
மேலும் வாகனம் சிறைப் பிடிக்கப்பட்டு, அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்குத் தொடரப்படும்.
எனவே, தனியாா் பேருந்து, ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் இந்த பேரிடா் காலத்தில் பொதுமக்களுக்காக சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு, முறையான கட்டணம் மட்டும் வசூலித்து வாகனங்களை இயக்குமாறு உத்தரவிடப்படுகிறது. மோட்டாா் வாகன சட்ட விதிகளை மீறி, கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணையா் தெரிவித்துள்ளாா்.