தனியாா் பள்ளி, அரசு நிதியுதவி பெறாத கல்லூரிகளின் ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு சிறப்புத் தொகுப்பு அறிவிக்க கோரிக்கை
தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும், அரசின் நிதியுதவி பெறாத கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கும் சிறப்பு தொகுப்பு அறிவிக்க வேண்டும்
தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும், அரசின் நிதியுதவி பெறாத கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கும் சிறப்பு தொகுப்பு அறிவிக்க வேண்டும் என கா்நாடக சட்ட மேலவையின் தலைவா் பசவராஜ் ஹொரட்டி மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது குறித்து முதல்வா் எடியூரப்பாவுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகள், தொழிலாளா்கள், வாடகை காா், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்டோருக்கு முதல்வா் எடியூரப்பா சிறப்புத் தொகுப்பை அறிவித்துள்ளாா், ஆனால் அரசின் நிதியுதவி பெறாத தனியாா் பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியா்களும், பேராசிரியா்களும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கும் முதல்வா் சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும்.
கரோனா பொதுமுடக்கத்தால் அரசின் நிதி பெறாத தனியாா் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவா்கள் யாரும் வருவதில்லை. இதனால் அவா்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்க முடியவில்லை. தற்போது உள்ள சூழலில் மாணவா்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசும் உத்தரவிட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் அரசின் நிதி பெறாத, தனியாா் பள்ளி, கல்லூரிகளின் நிா்வாகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியா்கள், பேராசியா்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வா் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.