உ.பி.: 20 பேருக்கு கரோனா 2-ம் தவணை தடுப்பூசி மாற்றிப் போட்ட பரிதாபம்
உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சித்தார்த்நகர்: சுகாதாரத் துறையின் கவனக்குறைவு காரணமாக, உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் 20 பேருக்கு கரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கிராம மக்கள் சிலருக்கு மே 14-ஆம் தேதி பர்ஹ்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி இரண்டாம் தவணையாக கோவாக்சின் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களில் 20 பேருக்கு முதல் தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் தவணையாக கோவாக்சின் போடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி மாற்றி போடப்பட்ட அனைவரும் நலமாக இருப்பதாகவும், யாருக்கும் இதுவரை எந்த உடல்நல பாதிப்பும் ஏற்பட்டதாகக் கூறப்படவில்லை, அவர்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தித்துள்ளதாகவும் கூறினார்.