பஞ்சாபில் காற்றில் பறந்த சமூக இடைவெளி
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் உள்ள சந்தையில் அதிக அளவிலான மக்கள் குவிந்தனர்
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் உள்ள சந்தையில் அதிக அளவிலான மக்கள் குவிந்தனர். சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் அதிக அளவில் கூட்டமாக மக்கள் கூடியது மேலும் கரோனா பரவும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் ஜூன் 10-ம் தேதி வரை முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் முகக்கவசமின்றி, சமூக இடைவெளியின்றி சந்தையில் குவிந்தனர்.
பஞ்சாபில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மே 27-ம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. எனினும் தொற்று பரவல் விகிதம் குறையாததால் ஜூன் 10-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் அமரீந்திர சிங் உத்தரவிட்டார்.
இந்நிலையில், வார இறுதி நாள்களில் கடைகள் ஏதும் திறக்காததால், வாரத்தின் முதல் நாளான இன்று அதிக அளவிலான மக்கள் சந்தையில் குவிந்தனர்.
பலர் முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளியின்றி குவிந்ததால் மேலும் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைகளில் பொதுமக்களுக்கு கிருமிநாசினியும் வழங்கப்படவில்லை.
மக்கள் அதிக அளவில் கூடுவது அச்சமளித்தாலும், எங்கள் வாழ்வாதாரத்திற்காக விற்பனையைத் தொடர்ந்து நடத்தியதாக வியாபார்கள் தெரிவித்துள்ளனர்.
பஞ்சாபில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,627 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 124 பேர் உயிரிழந்தனர்.