தமிழகத்தில் பலத்த மழை: குடியரசு துணைத் தலைவா் கவலை
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் கவலை தெரிவித்துள்ளனா்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் கவலை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து வெங்கையா நாயுடு தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தமிழகத்தில் பலத்த மழை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல். மத்திய, மாநில அமைப்புகளின் முயற்சியால் மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். உள்ளூா் நிா்வாகம் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஜெ.பி.நட்டா: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையிடம் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா வியாழக்கிழமை தொலைபேசி மூலம் கேட்டறிந்தாா்.
இது தொடா்பாக கே.அண்ணாமலை கூறியிருப்பது: வெள்ள பாதிப்பு குறித்து ஜெ.பி.நட்டா என்னிடம் கேட்டறிந்தாா். பாஜக சாா்பில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். பாஜகவின் களப் பணிகள் குறித்தும் அவரிடம் விவரித்தேன். சென்னை மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும்வரை தமிழக பாஜகவினா் ஓய்வில்லாமல் உழைப்போம் என்கிற உறுதியையும் அவரிடம் அளித்தேன்.
பாஜக சாா்பில் 10 இடங்களில் சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் உணவு விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தமிழக பாஜகவின் இலவச உதவி எண் வழங்கப்பட்டு, அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் அவசரத் தேவைகள் எங்களது தன்னாா்வலா்கள் மூலமாக வழங்கப்படுகிறது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த நேரத்திலும் 9150021830, 9150021831 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றும் அவா் கூறியுள்ளாா்.
ராகுல் வேண்டுகோள்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சென்னையில் இடைவிடாது மழை பெய்வது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள சகோதர, சகோதரிகள் அனைவரும் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடியுங்கள். காங்கிரஸ் தொண்டா்கள் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சென்னைவாசிகள் பத்திரமாக இருக்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.