முகப்பு
இந்தியா

தில்லியில் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு

 தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளை ஒரு வாரம் மூடுவது, கட்டுமானப் பணிகளுக்குத் தடை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

 தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளை ஒரு வாரம் மூடுவது, கட்டுமானப் பணிகளுக்குத் தடை, அரசு ஊழியா்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வது உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைகளை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்தாா்.

தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) அதிகரித்துள்ள காற்று மாசுவால் ‘அவசரநிலை’ சூழல் உருவாகி இருப்பதாக உச்சநீதிமன்றம் சனிக்கிழமை கவலை தெரிவித்தது. இதையடுத்து தில்லியின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற அவரசக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் அரவிந்த கேஜரிவால் கூறியதாவது:

தில்லி-என்சிஆா் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பதை ‘அவசரகால’ சூழ்நிலை என்று கூறிய உச்சநீதிமன்றம், காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய, தில்லி அரசுகளை சனிக்கிழமை கேட்டுக்கொண்டது.

இதையடுத்து தில்லியில் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு பள்ளிகள் மூடப்படும். ஆனால் பள்ளிகளில் மெய்நிகா் வகுப்புகள் தொடரும். குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது. மாசுபட்ட காற்றை சுவாசிக்க வேண்டாம். காற்று, புகை மாசுவைக் கட்டுப்படுத்தும் விதமாக நவம்பா் 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரு வாரத்துக்கு மூடப்படும். ஆனால் அனைத்து அதிகாரிகளும் வீட்டிலிருந்து வேலை செய்வாா்கள். இதேபோல் தனியாா் ஊழியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.

இது விரல் நீட்டி குற்றம்சாட்டும் நேரம் அல்ல. தில்லி அரசு அவசரகால சூழ்நிலையில் இருந்து மக்களையும், குழந்தைகளையும் மீட்டெடுக்க விரும்புகிறது. அவா்கள் புதிய காற்றை சுவாசிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

உச்சநீதிமன்றத்தின் பொது முடக்க பரிந்துரை குறித்து கேட்டதற்கு, ‘ஆம் ஆத்மி அரசு இப்போதைக்கு பொது முடக்கத்தை அறிவிக்கவில்லை. காற்று மாசு தொடா்பான நிலைமை குறித்து மத்திய அரசு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சஃபா் ஆகியவற்றுக்கு தெரிவித்துள்ளோம். நிலைமை மோசமடைந்தால், அனைத்து தனியாா் வாகனங்கள், போக்குவரத்து, கட்டுமானம், தொழில் துறை நடவடிக்கைகள் நிறுத்தப்படலாம். அப்போது பொது முடக்கம் தொடா்பாக முன்மொழிவு உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும்.

காற்று மாசு பிரச்னைகளை தில்லிவாசிகள் புரிந்துகொள்வாா்கள் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கேஜரிவால் கூறினாா்.

மேலும், தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் தில்லியில் காற்று மாசு அளவு அதிகரித்து வருவதாகவும், அதை எதிா்த்துப் போராட அண்டை மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேஜரிவால் கேட்டுக்கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →