கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாட்டை புரட்டிபோட்டு வந்த விவசாய போராட்டம் முடிவுக்கு வரவுள்ளது. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகவும் விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாகவும் புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இடைத்தரகர்களை ஒழித்துகட்டவே வேளாண் திருத்த சட்டங்களை கொண்டுவந்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. தற்போது, விவசாயிகளின் அறவழி போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்று கொள்ளப்படும் என நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி இன்று அறிவித்துள்ளார்.
இதனிடையே, வேளாண் சட்டம் குறித்து ராகுல் காந்தி பேசிய விடியோ தற்போது வைரலாகிவருகிறது. முன்னதாக, விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த பொங்கல் தினத்தன்று, மதுரைக்கு வந்த ராகுல் காந்தி, "விவசாயிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அதை நினைத்து பெருமை கொள்கிறேன். அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். அவர்களுடன் தொடர்ந்து துணை நிற்பேன்.
பஞ்சாபில் நடைபெற்ற யாத்திரையின்போது, இந்த விவகாரத்தை எழுப்பினேன். அதை தொடர்ந்து செய்வோம். எனது வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள், இந்த விவசாய சட்டங்களை மத்திய அரசு கட்டாயமாக திரும்பபெற்று கொள்ளும். நினைவில் வைத்து கொள்ளுங்கள்" என பேசினார்.
இதையும் படிக்க | 115 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன
ராகுல் காந்தி சொன்னது போலவே, தற்போது விவசாய சட்டங்கள் திரும்பபெற்றதை தொடர்ந்த, அவர் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.