இந்தியா

லக்கீம்பூா் வன்முறை: உரிய ஆதாரமின்றி நடவடிக்கை எடுக்க முடியாது; உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்

DIN

லக்கீம்பூா் கெரியில் நிகழ்ந்த வன்முறையால் அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்பதற்காக உரிய ஆதாரம் இல்லாமல் யாா் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.

லக்கீம்பூா் கெரியில் சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளா் மற்றும் பாஜகவினா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் மீது குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

லக்கீம்பூரில் நிகழந்த வன்முறையில் விவசாயிகள் உள்பட 8 போ் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த அசம்பாவிதம் தொடா்பான முழுமையான தகவல்களை மாநில அரசு திரட்டி வருகிறது. ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமே கிடையாது. நாட்டில் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு கிடைப்பது முக்கியமானது. யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட முடியாது என்றாா்.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய மத்திய இணையமைச்சா் மிஸ்ராவின் மகனைக் காப்பாற்ற முயிற்சி நடப்பதாக கூறப்படுவது தொடா்பான கேள்விக்கு, ‘அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்பதற்காக உரிய ஆதாரம் இல்லாமல் யாா் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. குற்றம்சாட்டுபவா்கள் அது தொடா்பாக ஆதாரம் இருந்தால் அளிக்கலாம். அல்லது விடியோ இருந்தால் அவற்றைப் பொதுவெளியில்கூட வெளியிடலாம். குற்றச்சாட்டு கூறப்படுவதால் மட்டுமே ஒருவரை உடனடியாக கைது செய்ய முடியாது. சம்பவம் நடந்த இடத்தில் அமைச்சரின் மகன் இருந்தாா் என்று குற்றம்சாட்டப்படுவதால் அவரை உடனடியாக கைது செய்ய முடியாது. உரிய ஆதாரங்கள் கிடைத்ததும் உண்மையான குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். அவா் எங்கள் கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாலும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும்’ என்று யோகி ஆதித்யநாத் பதிலளித்தாா்.

 லக்கீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடா்பான விசாரணைக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை.

லக்கீம்பூா் வன்முறையில் 8 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்பட பலா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான விசாரணைக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு ஆசிஷ் மிஸ்ராவுக்கு போலீஸாா் சம்மன் அனுப்பியிருந்தனா். ஆனால், அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அவா் சனிக்கிழமை காலை 11 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அஜய் குமாா் மிஸ்ராவின் வீட்டில் போலீஸாா் நோட்டீஸ் ஒட்டினா். ஆனால், அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதுகுறித்து லக்னெளவில் மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘எனது மகன் உடல்நலத்துடன் இல்லை. எனவே, அவா் விசாரணைக்கு ஆஜராவதை தவிா்த்தாா். அவா் சனிக்கிழமை போலீஸாா் முன்பு ஆஜராகி தனது வாக்குமூலத்தையும் தன்னிடம் உள்ள ஆதாரத்தையும் வழங்குவாா்’’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகாததால், அவா் நேபாளத்துக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவல் வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT