உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்று சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு வழிபாடு மேற்கொண்டார். இதையடுத்து, பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் ரோஹானியா பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள பேரணியில் அவர் கலந்து கொண்டு பேசவுள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வரும் உத்தரப் பிரதேச தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளருமான பூபேஷ் பாகேல், நாடாளுமன்ற உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா ஆகியோரும் பிரியங்கா காந்தியுடன் சென்றுள்ளனர். முன்னதாக, வாரணாசியில் உள்ள மா துர்கா ஆலயத்தில் பிரியங்கா வழிபாடு மேற்கொண்டார்.
இதையும் படிக்க | லக்கிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சரின் மகன் கைது
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் வரை அங்கு பிரியங்கா காந்தி தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தேர்தலுக்கான பரப்புரை திட்டம் வகுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.