பாஜகவில் ஓரங்கப்பட்ட வருண் காந்தி; வாஜ்பாய் விடியோவை பகிர்ந்து நெகிழ்ச்சி
லக்கிம்பூர் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பாஜக எம்பி வருண் காந்தி.
உத்தரப் பிரதேசம் லக்கமிப்பூர் கெரியில் விவசாயிகள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு நீதி கிடைத்திட வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, பாஜகவின் தேசிய செயற் குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருண் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார்.
வருண் காந்தி மீது பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையிலும், வருண் காந்தி தனது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கவில்லை. இந்நிலையில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பேசுவது போன்ற விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் இன்று பகிர்ந்துள்ளார். அதில், விவசாயிகளை அச்சுறுத்தும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடியோ, கடந்த 1980ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடக்குமுறைக்குள்ளான விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்திய காந்தி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் வாஜ்பாய் அதில் பேசியுள்ளார்.
இதையும் படிக்க | லக்கிம்பூர் விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பாஜக எம்பி வருண் காந்தி.
"விவசாயிகளை அச்சுறுத்தும் அரசை எச்சரிக்கிறேன். எங்களை அச்சமூட்ட வேண்டாம். விவசாயிகள் பயப்படமாட்டார்கள். விவசாயிகளின் இயக்கத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்த விருப்பமில்லை. அவர்களின் உண்மையான கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.
அரசு எங்களை பயமுறுத்தவோ அல்லது சட்டங்களை தவறாகப் பயன்படுத்தவோ அல்லது விவசாயிகளின் அமைதியான இயக்கத்தை புறக்கணிக்கவோ முயன்றால், நாங்களும் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறுவோம்" என வாஜ்பாய் பேசியுள்ளார்.
இதை ட்விட்டரில் பகிர்ந்த வருண் காந்தி, "பெரிய மனம் கொண்ட தலைவரின் அறிவார்ந்த வார்த்தைகள்" என பதிவிட்டுள்ளார். வருண் காந்தி மட்டுமல்லாமல் பாஜகவின் தேசிய செயற்குழுவிலிருந்து அவரது தாயார் மேனகா காந்தியும் நீக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியது.