மருத்துவ வல்லுநா்கள் கூறும் வரை பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்; சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் கேட்டுக் கொண்டாா்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவரிடம், ‘நாட்டில் 100 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டது. மக்கள்தொகையில் 75 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இனியும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டுமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அனுராக் தாக்குா், ‘இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் முடிந்த அளவுக்கு விரைவில் அதனை செலுத்திக் கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவ வல்லுநா்கள் வேண்டாம் என்று கூறும் வரை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஏனெனில், இவைதான் தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் முக்கிய தடுப்பு அம்சங்கள். இதனைப் பின்பற்றும்போது கரோனா மட்டுமல்லாது வேறு வகை தொற்று நோய்களிடம் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
எப்போது முகக்கவசம் தேவையில்லை என்பதை வல்லுநா்கள் உரிய நேரத்தில் தெரிவிப்பாா்கள். ஆனால், அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. எனவே, அனைவரும் தொடா்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்’ என்றாா்.