சூறையாடப்பட்ட பத்திரிகை அலுவலகம்; திரிபுராவில் வரலாறு காணாத வன்முறை
நாளிதழ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மூத்த பத்திரிகையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
திரிபுராவில் இயங்கிவரும் பிரதிவாதி கலாம் என்ற நாளிதழின் அலுவலகத்தின் மீது பாஜகவினர் (புதன்கிழமை) தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது. இதில், நான்கு பத்திரிகையாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமின்றி, வன்முறையில் பொருள்கள், வாகனங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன.
அகர்தாலாவில் அமைந்துள்ள பத்திரிகையின் அலுவலகம் சூறையாடப்பட்டதில், உபகரணங்கள், ஆவணங்கள் அழிக்கப்பட்டு, கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதாக பிரதிவாதி கலாமின் ஆசிரியர் அனல் ராய் செளத்ரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீவைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு திரிபுரா கதாலியாவில் மத்திய அமைச்சர் பிரதிமா பெளமிக் ஊர்வலம் நடத்தியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. வன்முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிஜன் தார் பேசுகையில், "கடந்த இரண்டரை ஆண்டுகளாக மூடிவைக்கப்பட்ட உள்ளூர் கமிட்டி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை அறிவேன். எங்கள் வாகனங்கள் சூறையாடப்பட்டது. ஒரு வாகனத்தின் மீது தீவைக்கப்பட்டுள்ளது" என்றார்.
Advertisement
இதையும் படிக்க | எந்தத் தடுப்பூசி சிறந்தது? இன்னும் இருக்கிறதா இந்த சந்தேகம்?
மாநில பாஜக தலைவர்கள் நடத்திய ஊர்வலத்தை தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. திரிபுராவில் இதுபோன்ற வன்முறை ஊடக அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டதே இல்லை என அனல் ராய் செளத்ரி தெரிவித்துள்ளார். நாளிதழ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மூத்த பத்திரிகையாளர்கள் எச்சரித்துள்ளனர்.