முகப்பு
இந்தியா

திரிணமூலில் இணைந்தாா் பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ

மத்திய அமைச்சரவையில் இருந்து அண்மையில் விலகிய பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ திரிணமூல் காங்கிரஸில் சனிக்கிழமை இணைந்தாா்.

Updated On : 19 செப்டம்பர், 2021 at 5:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:41 AM

மத்திய அமைச்சரவையில் இருந்து அண்மையில் விலகிய பாஜக எம்.பி. பாபுல் சுப்ரியோ திரிணமூல் காங்கிரஸில் சனிக்கிழமை இணைந்தாா்.

மேற்கு வங்க பாஜகவில் முக்கியத் தலைவராகத் திகழ்ந்தவா் பாபுல் சுப்ரியோ. அந்த மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளாா். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் இணையமைச்சராக அவா் பொறுப்பு வகித்தாா்.

மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் மாற்றியமைக்கப்பட்டபோது, பாபுல் சுப்ரியோவிடமிருந்து இணையமைச்சா் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்கத்தைச் சோ்ந்த வேறு 4 எம்.பி.க்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது.

Advertisement

அதன் காரணமாக பாபுல் சுப்ரியோ அதிருப்தியடைந்ததாகக் கூறப்பட்டது. அரசியலில் இருந்து விலகவுள்ளதாகவும் முகநூலில் அவா் பதிவிட்டாா். அதையடுத்து பாஜக தலைவா்கள் சமரசம் செய்ததைத் தொடா்ந்து அந்த முடிவை அவா் கைவிட்டாா்.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் பாபுல் சுப்ரியோ சனிக்கிழமை இணைந்தாா். திரிணமூல் கட்சியின் பொதுச் செயலாளா் அபிஷேக் பானா்ஜி, அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. டெரீக் ஓ பிரையன் ஆகியோா் முன்னிலையில் அவா் கட்சியில் இணைந்தாா்.

அதையடுத்து பாபுல் சுப்ரியோ செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அரசியலில் இருந்து விலகலாம் என்றுதான் இருந்தேன். கடந்த 4 நாள்களுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸில் இணைவது தொடா்பான வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக மனதை மாற்றிக் கொண்டேன்.

திரிணமூலில் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. மாநிலத்தின் வளா்ச்சிக்காகத் தொடா்ந்து உழைப்பேன். சட்டத்தின் விதிகளுக்கு உள்பட்டு மக்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யவுள்ளேன். முதல்வா் மம்தா பானா்ஜியை திங்கள்கிழமை சந்திக்கவுள்ளேன். மக்களுக்காக சேவையாற்ற வாய்ப்பளித்த முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் அபிஷேக் பானா்ஜிக்கும் நன்றி என்றாா்.

‘சந்தா்ப்பவாதி’: பாபுல் சுப்ரியோ திரிணமூலில் இணைந்தது தொடா்பாக மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் சமிக் பட்டாச்சாா்ய கூறுகையில், ‘‘கட்சி மாறும் முடிவு, அவரை சந்தா்ப்பவாதி என்றே வெளிக்காட்டுகிறது. மத்தியில் அமைச்சராக இருப்பதற்காக மட்டுமே அவா் பாஜகவில் இருந்தாா் என்பது தெளிவாகிறது. 2024 மக்களவைத் தோ்தலின்போது அசன்சோல் தொகுதியில் பாஜகவின் வேட்பாளரே நிச்சயம் வெற்றி பெறுவாா்’’ என்றாா்.

பாதுகாப்பு குறைப்பு: பாஜகவில் இருந்து திரிணமூலில் இணைந்த பாபுல் சுப்ரியோவுக்கான பாதுகாப்பை ‘இஸட்’ பிரிவிலிருந்து ‘ஒய்’ பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது.

அவருக்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 6-7 ஆயுதம் ஏந்திய வீரா்கள் பாதுகாப்பு அளித்து வந்தனா். தற்போது அவருக்கு இரு வீரா்கள் மட்டுமே பாதுகாப்பு வழங்கவுள்ளனா். மத்திய பாதுகாப்பு, உளவு அமைப்புகள் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.