தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!
மனசெல்லாம் தொடரின் நாயகி புதிய பாடலுக்கு நடனமாடியுள்ளது குறித்து...
மனசெல்லாம் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை பரமேஸ்வரி புதிய பாடலில் நடனமாடியுள்ளார்.
தெலுங்கில் வெளியாகவுள்ள அப்பாடலுக்கான படப்பிடிப்பு ஆந்திரத்தில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
சின்ன திரையில் நடித்துவந்த நிலையில், தற்போது தெலுங்கு பாடலுக்கு பரமேஸ்வரி நடனமாடியுள்ளார். இதன்மூலம் தெலுங்கில் பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையில் மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இத்தொடரில் வெண்பா, பரமேஸ்வரி ரெட்டி, தீபக், ஜெய்பாலா உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வந்தனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குறுகிய காலமே ஒளிபரப்பாகியிருந்தாலும், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதன்மைத் தொடர்களில் ஒன்றாக மனசெல்லாம் தொடர் இருந்தது. இத்தொடரில் தீபக் - பரமேஸ்வரி தம்பதிக்கு இடையிலான காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
விருப்பம் இல்லாமல், சூழல் காரணமாக பிடிக்காத ஒருவரான தீபக்கை திருமணம் செய்துகொண்டு, பரமேஸ்வரி சந்திக்கும் முரண்களும் சூழல்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் காட்டப்பட்டிருந்தன. இதனால், தமிழ் ரசிகர்களிடையே பரமேஸ்வரியின் நடிப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், தற்போது தெலுங்கில் உருவாகும் புதிய சுயாதீன பாடலுக்கு பரமேஸ்வரி ரெட்டி நடனமாடியுள்ளார்.
கிராமத்துப் பின்னணியில் மலை, ஆறுகளிடையே உருவாகும் இப்பாடலின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட விடியோவை பரமேஸ்வரி பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் பரமேஸ்வரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.