ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை: சீனா
ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை என சீனா தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு ஆயுதம் வழங்கியதாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை என சீனா தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு ஆயுத உதவி வழங்கினால் சீனா மீது 50% வரி உயர்வு செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு ஆயுதங்களை சீனா வழங்கவிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
Advertisement
முன்னதாக, தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனமும் சீனா ஏற்கனவே தோளில் வைத்துச் சுடும் ஏவுகணைகளை ஈரானுக்கு அனுப்பியதாகக் குறிப்பிட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், ”இராணுவப் பொருள்களின் ஏற்றுமதி தொடர்பாக நாங்கள் எப்போதும் எச்சரிக்கையான மற்றும் பொறுப்பான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறோம். ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி அதன் சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுகிறோம்.
எங்கள் மீது பரப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறுகளை நாங்கள் எதிர்க்கிறோம்” என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
சீனா ஈரானுடன் முக்கிய பொருளாதார நட்புறவைப் பேணி வருகிறது. ஈரானிடமிருந்து சீனாவுக்குத் தேவையான எண்ணெய் பெருமளவில் வாங்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒப்பந்தம் எதுவும் இல்லையென்றாலும் வர்த்தக ரீதியான உறவு தொடர்ந்து வருகிறது.
வளைகுடா நாடுகளுடன் சீனா சிறந்த உறவைப் பேணி வருவதால் ஈரான் அந்த நாடுகள் மீது நடத்தியத் தாக்குதல்களை சீனா கண்டித்தது குறிப்பிடத்தக்கது.