புது தில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகனை, பிரதமர் நரேந்திர மோடியால் நகலெடுக்க முடியாது என்று சூசகமாகக் கிண்டலடித்துள்ளது காங்கிரஸ் கட்சி.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் கூட்டு விமான தளத்திற்கு சென்றடைந்த அவருக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தின் போது, நேரத்தை வீணடிக்காமல், நெடுந்தூர விமானப் பயணத்திலும், முக்கிய கோப்புகளை சரிபார்த்ததாக சுட்டுரையில் நேற்று புகைப்படம் வெளியானது. பிரதமர் நரேந்திர மோடியின் சுட்டுரைப் பக்கத்திலும் இந்தப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இதையும் படிக்கலாமே.. நெடுந்தூர விமானப் பயணத்தையும் பயனுள்ளதாக மாற்றிய பிரதமர் மோடி
இந்நிலையில், சில புகைப்படங்களை நகலெடுக்க முடியாது என்று சுட்டுரையில் கூறியிருக்கும் காங்கிரஸ், அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது விமானத்திலேயே செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறி மூன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அதில், 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவுக்குத் திரும்பிய போது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ஏர் இந்தியா ஒன் விமானத்திலேயே செய்தியாளர்களை சந்தித்த புகைப்படத்தையும்,
அமைப்புச் சாரா நாடுகளின் 16வது மாநாட்டில் கலந்து கொண்டு, புதுதில்லி திரும்பும் போது விமானத்திலேயே செய்தியாளர்களை சந்தித்த புகைப்படத்தையும் காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் விமானப் பயண புகைப்படம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று, காங்கிரஸ் கட்சி மன்மோகன் சிங்கின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.