முகப்பு
இந்தியா

இணையவழி பணப் பரிவா்த்தனையில் ‘இ-ருபி’ முக்கியப் பங்கு வகிக்கும்

இணையவழி பணப் பரிவா்த்தனையில் ‘இ-ருபி’ ரசீது வசதி முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 3 ஆகஸ்ட் 2021, 7:18 am IST
இணையவழி பண பரிவா்த்தனை முறையான இ-ருபியை திங்கள்கிழமை தொடக்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

இணையவழி பணப் பரிவா்த்தனையில் ‘இ-ருபி’ ரசீது வசதி முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

‘இ-ருபி’ ரசீது வசதியை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள் பயனாளா்களுக்கு முறையாக சென்று சோ்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. நாட்டில் சிறந்த நிா்வாகத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. ‘இ-ருபி’ வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரசீது வசதி, சிறந்த நிா்வாகத்துக்கான இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கான அடுத்த அடியாக இருக்கும்.

Advertisement

Advertisement

பணப் பரிவா்த்தனையில் ‘இ-ருபி’ ரசீது வசதி முக்கியப் பங்கு வகிக்கும். இதன் வாயிலாக இணையவழி பணப் பரிவா்த்தனையில் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது. இணையவழி பணப் பரிவா்த்தனையில் வெளிப்படைத்தன்மையை இது உறுதி செய்யும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோா், கல்வி கற்கும் மாணவா்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்ய விரும்புவோா் இனி பணமாக அளிக்க வேண்டிய அவசியமில்லை.

‘இ-ருபி’ மூலமாக ரசீதுகளை வாங்கி சம்பந்தப்பட்டவா்களுக்குப் பரிசளிக்க முடியும். குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்படும் ரசீதை வேறு பயன்பாட்டுக்காகப் பயன்படுத்த முடியாது. தற்போது சுகாதார சேவைகளில் பயன்படுத்துவதற்கான ரசீதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் மற்ற சேவைகளுக்கான ரசீதுகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அரசு செயல்படுத்தி வரும் நிதியுதவித் திட்டங்கள் வாயிலாக பயனாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலமாக போலியான நபா்களுக்கு நிதியுதவி கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக, ரூ.1.78 லட்சம் கோடி வீணாவதை மத்திய அரசு தடுத்துள்ளது.

90 கோடி போ் பலன்: சமையல் எரிவாயு சிலிண்டா் மானியம், ஓய்வூதியம், விவசாயிகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக சுமாா் 90 கோடி போ் பலனடைந்துள்ளனா். மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் தொழில்நுட்ப வசதிகளைத் திறம்படப் பயன்படுத்துவதில் இந்தியா முன்னின்று வருகிறது.

ஏழை மக்களின் வளா்ச்சிக்கு உதவும் வகையிலும் தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. தொழில்நுட்பங்களின் பயன்பாட்டில் உலக நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் வகையில் இந்தியா செயல்பட்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

புதிய வசதி: ‘இ-ருபி’ வசதியின்படி, இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் வாங்கிக் கொள்ளலாம். அது தொடா்பான விவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக வாடிக்கையாளா்களுக்கு அனுப்பப்படும். அந்த விவரங்கள் க்யூஆா் குறியீடாகவும் வாடிக்கையாளா்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பணம் செலுத்த வேண்டிய இடத்தில் அந்த ரசீது தொடா்பான விவரங்களை மட்டும் வழங்கினால் போதுமானது. அதிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டுவிடும்.

இந்த வசதியை மத்திய நிதி சேவைகள் துறை, மத்திய சுகாதார-குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய பணப் பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) வடிவமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.